எஸ்.பி பட்டினம் விவாகரம் குறித்து வீண் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை தேவை – தமுமுக!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் எஸ்.பி பட்டினம் விவகாரம் குறித்து வீண் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினத்தைச் சேர்ந்த செய்யது முகம்மது என்ற இளைஞரை, காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார்.
முன்னதாக செய்யது முகம்மது லாக்கப்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பிறகுதான் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில் வழக்கு:
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்விஷயம் தொடர்பாக ஒரு சிறு வன்முறையும் நடைபெறவில்லை.
அமைதியாக கோரிக்கை:
இவ்விஷயத்தில் தமுமுக உட்பட அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் அமைதியான முறையில் காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், நீதிமன்றம் வழியாக எஸ்.ஐ. காளிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்.
கண்டனத்துக்குரிய தகவல்:
இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட நபர் ரவுடி என்றும் எஸ்.ஐ. காளிதாஸ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறு. மானிதாபிமானமற்ற செயல் என்றும், ராமநாதபுரத்தில் பொதுமக்கள் அஞ்சும் வகையில் வன்முறைகள் நடைபெற்று வருவதாகவும் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்கள் தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
நிவாரணத் தொகை எதற்காக?:
மேலும் எச்.ராஜா சொல்வதுபோல் கொல்லப்பட்டவர் ரவுடி என்றால், ரவுடி கொலை செய்யப்பட்டால் தமிழக அரசு நிவாரணத் தொகை ரூபாய் 5 லட்சம் வழங்குமா என்பதை யோசிக்க வேண்டும்.
அரசின் நடவடிக்கைகள்:
ரவுடியைக் கொலை செய்தால் எஸ்.ஐக்கு சன்மானம் வழங்காமல் சஸ்பெண்ட் செய்யுமா என்பதையும் யோசிக்க வேண்டும். வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றுமா என்பதையும் அவர் மனதில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.