எமியை டக்குன்னு கண்டித்திருக்க வேண்டாமா "முரட்டுக்காளை" ரஜினி?.. கேட்கிறார் வீரலட்சுமி
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பான படங்களில் நடித்தவர் ரஜினிகாந்த். அவர்தான் எமி ஜாக்சனிடம் எடுத்துச் சொல்லி அவரது பேச்சைக் கண்டித்திருக்க வேண்டும். அதை அவர் செய்யாததால்தான் அவரைக் கண்டிக்கிறோம் என்று தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி கூறியுள்ளார்.
தமிழகத்தின் வளரும் குட்டிக் கட்சித் தலைவியாக வலம் வருபவர் வீரலட்சுமி. ஆன்லைனில் படு பிசியாக உள்ள அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர். அதேசமயம் களத்திலும் தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பி வருபவர்.
இவர் லேட்டஸ்டாக கிளப்பிய பரபரப்பு ரஜினிகாந்த்துக்கு எதிராக அறிவித்த போராட்டம். எமி ஜாக்சன் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி பேசப் போக, அவர் ஜோடியாக நடிக்கும் ரஜினியை எதிர்த்துப் போராட்டத்தை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் வீரலட்சுமி.
இந்த நிலையில் வீரலட்சுமி விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நிறையப் பேசியுள்ளார்.. அதிலிருந்து..
அப்பா சொத்தை வித்து
நானும் நிறைய தம்பிகளும் எங்களின் லட்சியத்தை வென்றெடுக்க, எங்க சொத்துக்களை வித்து அந்தப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டுறோம். என் அப்பா சொத்துக்களை அவர் அனுமதியோட நான் செலவழிக்கிறேன். இன்னும் உணர்வுப்பூர்வமா பலர் நன்கொடை கொடுக்கக் காத்திருக்காங்க. ஆனா, யாரிடமும் கைநீட்டி காசு வாங்கி கட்சி நடத்தும் எண்ணமும் இல்லை, அதற்கு அவசியமும் இல்லை!
விரைவில் கட்சிப் பதிவு
இதுவரை கட்சியைப் பதிவு செய்யவில்லை. சீக்கிரம் பதிவு பண்ணிருவோம். அதுக்கான வேலையெல்லாம் வேகமா நடந்துட்டு இருக்கு.
ரஜினிக்குத் தெரியாதா?
நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் கலாச்சாரம், மாண்புகளை அனுபவரீதியாக அறிந்து வைத்திருப்பவர். ஜல்லிக்கட்டு தொடர்பான படங்களில் நடித்திருப்பவர். அவருடன் எந்திரன்-2வில் ஜோடி சேருகிற ஒரு நடிகை ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்தை சொல்லும்போதே ரஜினிகாந்த் அல்லவா அதை முதலில் கண்டித்திருக்க வேண்டும். அவர் அமைதியாக இருந்ததால் அந்த நடிகை சொல்வதை ஆமோதிக்கிறார் என்றுதானே அர்த்தம்? அதனால்தான் நாங்கள் போராடுகிறோம். எமி ஜாக்சனை அவருடைய படத்திலிருந்து நீக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்!
ரத்தத்தில் ஊறிப் போன விஷயம்
இது என் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம். என் குடும்பத்தில் இதற்கு முழு ஆதரவு இருக்கிறது. என் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டவும் செய்கிறார்கள். கண்முன் நடக்கிற நல்லதை கொண்டாடுகிற நாம், கெட்டதை பார்க்கும்போது தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது. ஆனால் அப்படித் தட்டிக் கேட்காமல் நமக்கென்ன என்று ஒதுங்கித்தானே போகிறோம். இப்படியே அனைவரும் ஒதுங்கிக் கொண்டு போனால் தமிழரை, தமிழினத்தை வழி நடத்த யார் இருப்பார்கள்? தமிழகத்தை ஒரு தமிழர் ஆள்வது எப்போது? அதான் என் கடமையை செய்கிறேன்!
காப்பி அடித்த திமுக
அவ்வளவு ஏன், தமிழர் முன்னேற்றப் படை யின் சார்பில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் என்று கட்சியின் அதிகாரபூர்வ வலைதளத்தில் நான்தான் முதன்முதலில் பதிவிட்டேன். ஆனால், அதை தி.மு.க அப்படியே காப்பி அடித்துவிட்டது. நாங்கள் செய்தி பதிவிட்ட நேரத்தையும் எடுத்துப் பாருங்கள்... அதைக் காப்பியடித்து தி.மு.க.வின் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆர்ப்பாட்ட அறிவிப்பு நேரத்தையும் எடுத்துப் பாருங்கள்... எல்லாக் கட்சியும் எங்களைக் காப்பியடிக்கிறாங்கண்ணே..!
18 வயதில்
எனது 18 வயதில் நான் அரசியலுக்கு வந்தேன். அதுக்கான ஆர்வம் சின்ன வயது முதலே இருந்தது. கோகோ, கபாடி போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றிகளைக் குவித்திருக்கிறேன். எப்போதும் அதி உற்சாகத்துடன் இருப்பேன்.
சக்திக்கு மீறிய வளர்ச்சி
6-ம் வகுப்பு படிக்கும்போதே என்னை 9-ம் வகுப்பு மாணவிகளுடன் ஓட்டப் பந்தயத்துக்காக ஓட விடுவார்கள். அப்போதே என் சக்திக்கு மீறியவர்களுடன் போட்டியிடவும் எதிர்க்கவும் ஆரம்பித்து விட்டேன். பின்னர் என் சமூகப் பார்வையை புரிந்து கொண்டு ஒரு தொழிற்சங்கத்தில் இணைந்துப் பணியாற்ற அழைத்தார்கள். போனேன்.
தொழிற்சங்கத் தலைவராக
என்னுடைய அயராத உழைப்பால் மாநிலப் பொதுச் செயலாளர் வரையில் வந்தேன். பின்னர், அந்தத் தொழிற் சங்கத்துக்கு முழுமையாய் செயலாற்ற ஒரு பெண்ணே இருந்தால் நல்லது என்று என்னையே அதற்கு தலைவராக்கினார்கள். தொழிற்சங்கத்தில் இருந்தபோது, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களைக் கண்டித்தும் முற்றுகையிட்டும் பல்வேறு போராட்டங்களை ஆயிரக் கணக்கில் பெண்களை திரட்டி நடத்தியுள்ளேன்.
பெரியார் புரட்சிகர வீரர்கள் படை
அந்தச் செயல்பாடுகளால் பெரியார் புரட்சிகர வீரர்கள் படை என்று ஒரு அமைப்பைத் துவக்கினோம். 2009 ஈழப் படுகொலையின் தாக்கமாக, எங்கள் அமைப்பை தமிழர் முன்னேற்றப் படை என்று ஆக்கிவிட்டோம்!
ஜெயலலிதாவும், சோனியாவும்தான் எதிரிகள்
காங்கிரஸை கருவறுத்தே தீரவேண்டும் என்று சென்னை வள்ளுவர் கோட்டம் தொடங்கி குமரி வரை துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்துகொண்டே 32 நாட்கள் நடை பயணம் மேற்கொண்டோம். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும், மத்தியில் சோனியாவும் எங்களின் அடுத்த முக்கியமான எதிரிகள். இவர்களைப் போன்றவர்களால்தான் பெண்கள் அரசியலுக்கே வரத் தயங்குகிறார்கள். ஆனால், நான் அந்த வரலாற்றை மாற்றி எழுதுவேன்!
எங்களோடது தேர்தல் அரசியல்
நம்முடையது தேர்தல் அரசியல்தாண்ணே. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, விழுப்புரம் பகுதிகளில் எங்கள் அமைப்புக்கு பலத்த ஆதரவு இருக்கு. வருங்காலத்தில் எங்களோடு எந்தக் கட்சி ஒருமித்த கருத்து கொள்கிறதோ, அதனோடு கூட்டணி வைத்து பயணிப்போம். ஆனால், எங்களை யாராவது கூப்பிட்டால்தான் கூட்டணியைப் பற்றிப் பேசுவோம். நாங்களாகப் போக மாட்டோம்!
பத்து பேரில் ஒருத்தரையாவது சாச்சுப்புட மாட்டேனா
எங்களுக்கும் எதிரிகள் இருப்பார்கள்தான். ஆனால், என்னைக் கொல்ல வருகிற பத்து பேரில் ஒருவரை என்னால் சாய்க்க முடியாதா? நான் தமிழச்சிண்ணே..! எதையும் யாரையும் சமாளிப்பேன்!
திமுகக்கு நமக்கு நாமே, பா.ம.கவுக்கு மாற்றம்-முன்னேற்றம்.. இது போல உங்களுக்கு..?
புதிய ஆட்சி-புதிய அரசியல்..!
முதல் கையெழுத்து
ஆட்சிக்கு வந்தால் நாங்கள் போடும் முதல் கையெழுத்து, தமிழ்நாட்டில் மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணிகளில் 95 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே என்ற ஆணையில்தான் என்ற வீரலட்சுமி தனக்கு முதல்வராகும் தகுதியும் இருப்பதாக உரத்த குரலில் சொல்கிறார்.