தட்ஸ் தமிழ் ஜோதிடர் கே.ஆர். சுப்ரமணியனுக்கு டி.எம்.எஸ் விருது
மதுரை: தென்கொரியாவில் நடைபெற்ற பன்னாட்டு ஜோதிடவியல் கருத்தரங்கத்தில் பங்கேற்று ஆய்வு கட்டுரைகள் சமர்பித்து உரையாற்றிய நமது தட்ஸ் தமிழ் ஜோதிட பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் அவர்களுக்கு டி.எம்.எஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மதுரையில் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் ரசிகர் மன்றம் சார்பில், விருது வழங்கும் விழா மற்றும் பட்டிமன்றம் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.சிவராம் தலைமை வகித்தார். மன்ற தலைவர் பாலன் வரவேற்றார். பல துறைகளில் திறம்பட செயல்படும் 12 பேருக்கு டி.எம்.எஸ்., விருதுகள் வழங்கப்பட்டன.
நமது ஒன் இந்தியா தட்ஸ் தமிழ் இணையதளத்தின் ஜோதிடர் பேராசிரியர் திரு.கே.ஆர்.சுப்ரமணியன் அவர்களுக்கு டி.எம்.எஸ் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் செய்த சாதனைகளை விழா மேடையில் வாசித்தனர்.
தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக ஜோதிடவியலில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றது. ஜோதிடவியலை சுமார் 30 வருடமாக கற்றுக்கொடுத்துக் கொண்டிருப்பது. தமிழ்நாடு முழுவதும் ஜோதிட பயிற்சி மையங்களை நிறுவி ஆயிரக்கணக்கான தொழில்முறை ஜோதிடர்களையும் நூற்றுக்கணக்கான ஜோதிட ஆசிரியர்களையும் உருவாக்கிக் கொண்டிருப்பது. மதுரை காமராசர் பல்கலைக்கழக ஜோதிடவியல் படிப்புகளுக்காக பாடத்திட்டத்தை சீரமைத்து நான்கு பாடப்புத்தகங்களை வடிவமைத்து எழுதியது. மதுரை காமராசர் பல்கலைக்கழக ஜோதிடவியல் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்தது, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஜோதிடவியல் படிப்புகளை துவக்கியது. ஜோதிடவியலில் முதுகலை பட்டப்படிப்பு, இளங்கலை பட்டப்படிப்பு, உயர் பட்டயபடிப்பு, பட்டயபடிப்பு சான்றிதழ் படிப்புகளை துவக்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது. ஜோதிடவியல் படிப்புகளுக்காக பாடத்திட்டம் வடிவமைத்து உலகத் தரம் வாய்ந்த முப்பது ஜோதிட பாடப்புத்தகங்களை எழுதியிருப்பது. ஒன் இந்தியா தட்ஸ் தமிழ் இணைய தளத்தில் ஜோதிட கட்டுரைகளை எழுதிக் கொண்டிருப்பது, வாஸ்து சாஸ்திரம் தொடர்பாக தென்கொரியாவில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் இந்திய ஜோதிடவியல் சரித்திரத்திலேயே முதன் முறையாக இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு ஆய்வு கட்டுரை சமர்பித்து சிறப்புரையாற்றி இந்தியாவின் வேத விஞ்ஞான பெருமையை உலகிற்க்கு பறைசாற்றியது உள்ளிட்ட பல சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவில் டி.எம்.எஸ்., மகன் டி.எம்.எஸ்.செல்வக்குமார், பேராசிரியர் மோகன் பேசினர். ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கழக தலைவர் அனகன்பாபு பட்டிமன்றத்தை துவக்கி வைத்தார். பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் தலைமையில் மகேஸ்வரி, திருநாவுக்கரசு, பாண்டியராஜன், ரேணுகாதேவி பேசினர்.