மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடைந்துள்ளது - ஜெயலலிதா பெருமிதம்
சென்னை: மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக விளங்குவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடனான சந்திப்பிற்கு பின் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: மின் உற்பத்தியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 8,432 மெகாவாட் மின்சாரம் மாநில மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின்உற்பத்தி மூலம் 7,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பிற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு பசுமை மின் வழித்தடம் தேவைப்படுகிறது.
உதய் திட்டத்தை பொறுத்தவரை அதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். தமிழகத்தில் புதிய மின்திட்டங்களை செயல்படுத்தவும், புதிய வழித்தடங்களை அமைக்க நிதி உதவியும், கடனுதவியும் மத்திய அரசு வழங்க வேண்டும். உபரி மின்சாரத்தை எடுத்துச் செல்ல தனி வழித்தடம் வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.