ரூ.1,400 கோடியில் சூரிய மின் உற்பத்தி: தமிழக அரசு - அதானி குழுமம் ஒப்பந்தம்
சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1400 கோடி முதலீட்டில் 200 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் பூங்காவை அமைக்க தமிழக அரசுடன் அதானி குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக (TANGEDCO) அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் தொழிற்சாலையை தொடங்குவது குறித்தும் மாநில அரசுடன் அதானி குழுமம் ஆலோசனை நடத்தி வருகிறது.
200 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் இரண்டு நாட்களுக்கு முன்னர் கையெழுத்தாகின. ஒரு மெகாவாட் மின்சார உற்பத்திக்கு ரூ.6.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை முதலீடு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தியை பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் தமிழக அரசு 5% உற்பத்தியை மட்டுமே அடைந்துள்ளது. 2015-ம் ஆண்டுக்குள் 3000 மெ.வாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்ற தமிழக அரசின் திட்டம் பெரிய அளவில் பலனளிக்காத சமயத்தில் அதானி குழுமத்தின் சூரிய மின் தொழிற்சாலை முதலீடு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.