#jayalithaa 500 டாஸ்மாக் கடைகளை அதிரடியாக மூட உத்தரவு... சொன்னதை செய்துகாட்டிய ஜெ.
சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் முதல்வர் ஜெயலலலிதாவின் பிரசாரத்திலும் தொடர்ந்து படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. தற்போது தாம் உறுதியளித்தபடியே மதுவிலக்கின் முதல் கட்டமாக 500 டாஸ்மாக் மதுகடைகளை மூடவும் மது கடைகளின் நேரத்தை குறைக்கவும் அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து போராடிய நிலையில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார்.
ஆனால் அப்போதெல்லாம் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, மதுவிலக்கு சாத்தியமே இல்லை எனக் கூறிவந்தது. சட்டசபை தேர்தல் களத்திலும் மதுவிலக்கு பிரதான அம்சமாக உருவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில் சில்லறை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும்; குடிப்பழக்கத்துக்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் அறிக்கையில் கூறியபடியே, சில்லறை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரத்தை காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணி என குறைத்து உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா. மேலும் முதல் கட்டமாக 500 சில்லறை மதுபான கடைகளை மூடவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தாம் சொன்னபடியே செய்து காட்டிய ஜெயலலிதா அடுத்ததாக மதுபான கடைகளுடன் கூடிய பார்களையும் மூட உத்தரவிடுவார் என்ற நம்பிக்கையையும் விதைத்திருக்கிறார்.