திரிபுராவில் மார்க்சிஸ்ட் கோட்டை தகர்த்தப்பட்டது போல் தமிழகத்திலும் மாற்றம் ஏற்படும்- தமிழிசை
திரிபுராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் ஏற்படும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
சென்னை: திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கட்சிக்கு முடிவு கட்டியது போல் தமிழகத்திலும் மாற்றம் ஏற்படும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
திரிபுராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் திரிபுரா மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டை என்பது தகர்த்தப்பட்டுவிட்டது.
இந்த தேர்தல் வெற்றி குறித்து சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில் தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடக்கிறது.
ஆரோக்கியமான சூழல்
தாமதமாக இருந்தாலும், இப்போது நடைபெறுவது மகிழ்ச்சி தான். நிர்வாக சீர்கேடுகள் இருந்தாலும் அவற்றை சீர்செய்ய வேண்டியது இக்கூட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். இது ஆரோக்கியமான வெளிப்பாடாக உள்ளது.
சந்திக்க மறுக்கவில்லை
காவிரி பிரச்சினையை வைத்து பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். பிரதமர் சந்திக்க மறுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார்.
கர்நாடகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்
உண்மையை திரித்து காவிரியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார். சித்தராமையா, தமிழக முதல்வரை சந்திக்க மறுத்தபோது கண்டித்தீர்களா? உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தபிறகு கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏன் கூட்டுகிறீர்கள்?
துறை சார்ந்த அமைச்சர்
தண்ணீர் தரவேண்டும் என திருநாவுக்கரசர் மூலமாக வலியுறுத்தி இருக்கலாமே. கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து இருக்கலாமே. பிரதமர் சந்திக்க மறுக்கவில்லை, முதலில் அந்த துறையை சேர்ந்தவரை சந்திக்கும்படி தான் கூறியுள்ளார்.
ராஜினாமா செய்யுங்கள்
இலங்கை பிரச்சினையில் நாடகம் நடத்தியது தெரியும். காவிரி பிரச்சினையில் ராஜினாமா செய்ய அதிமுக எம்.பி.க்களை துணைக்கு ஏன் அழைக்கிறீர்கள். துணிவு இருந்தால் 4 தி.மு.க. எம்.பி.க்களின் ராஜினாமா கடிதத்தை உடனே தாருங்கள். பிரதமர் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வார். சந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
அடிப்படை பணிகள்
தமிழகத்தை அலட்சியப்படுத்த வேண்டிய சூழ்நிலை பிரதமருக்கு கிடையாது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் அடிப்படை பணிகள் தொடங்குகிறது. திரிபுராவில் கம்யூனிஸ்டு கட்சி நிராகரிக்கப்பட்டு உள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும். திரிபுராவில் ஏற்பட்ட நிலை, தமிழகத்திலும் ஏற்படும் என்றார் தமிழிசை.