காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக உறுப்பினரின் பெயர் அறிவிப்பு
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக உறுப்பினரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக உறுப்பினரின் பெயர் அறிவிக்கப்பட்டது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைபடுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைத்து, மத்திய அரசிதழில் வெளியிட்டு பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் செயலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டி, பிரதமருக்கும், மத்திய நீர்வளத்துறை மந்திரிக்கும் 26.5.2018 அன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதங்களை அனுப்பினார்.
அதைத் தொடர்ந்து நேற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் மத்திய அரசால் அமைக்கப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக உறுப்பினரை தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரி ஆணைய உறுப்பினராக தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதுபோல் காவிரி ஒழுங்காற்று குழுவுக்கான தமிழக உறுப்பினர் பெயரும் அறிவித்துள்ளது. ஒழுங்காற்று குழு உறுப்பினராக நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியுள்ளார்.
காவரி நீரை பங்கிடும் 4 மாநிலங்களும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.