சட்டசபையில் பேச விடலை...வெளிநடப்பு செய்து மக்கள் மன்றத்தில் பதிவு செய்றோம் - ஸ்டாலின்
எதிர்கட்சியினர் எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு செய்வதாக கிண்டலடிப்பதால் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் ஸ்டாலின்.
சென்னை: சட்டசபையில் ஆரோக்கியமான விவாதத்திற்கு அனுமதி இல்லை என்பதால், அரசின் தவறுகளை மக்களிடம் எடுத்துக்கூறவே வெளிநடப்பு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று அந்தத் துறைகளின் வளர்ச்சித்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதிமுக எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் தொடர்பாக திமுகவினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் சட்டசபையில் அமளி துமளி ஏற்படுகிறது. தினசரியும் எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்து விட்டு பின்னர் விவாதத்தில் பங்கேற்கின்றனர்.
கேள்வி நேரம்
ஜூன் 22ஆம் தேதி இன்று நடைபெற்ற கூட்டத்தில், கேள்வி நேரத்தின்போது, பாலில் கலப்படம் செய்பவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் கூறுகையில், பாலில் கலப்படம் செய்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாலில் கலப்படம் செய்பவர்கள் அபராதம் கட்டி தப்பித்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.
கவன ஈர்ப்பு தீர்மானம்
அதன் பின்னர் எண்ணூர் துறைமுகம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.சுதர்சனம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தபோது, எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்குக் கொடுப்பது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. மேலும் இது தொடர்பாக அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆரோக்கியமான விவாதம்
அதன் பின்னர், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சட்டசபையில், ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிசாமி வரை ஆரோக்கியமான விவாதத்திற்கு அனுமதி கொடுப்பதில்லை. ஆரோக்கியமான விவாதம் செய்வதற்கு பேரவைத் தலைவருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம்.
வெளிநடப்பு ஏன்
அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவே திமுக சார்பில் வெளிநடப்பு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம்.
வெளிநடப்பு செய்தாலும், மக்கள் பிரச்னையைக் கருதி மீண்டும் சட்டசபைக்குள் சென்று விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறோம் என்று கூறியதையடுத்து, அவரது தலைமையில், திமுக எம்.எல்.ஏக்கள் இன்றும் வெளிநடப்பு செய்தனர்.
கிண்டலடிப்பதா?
எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்வதை கிண்டலடிக்கின்றனர். சட்டசபையில் மக்கள் பிரச்சினை குறித்து எதிர்கட்சியினரை பேச விடுவதில்லை என்று நேற்றே கூறிய ஸ்டாலின், சபாநாயகரை கண்டித்தே வெளிநடப்பு செய்வதாகவும், பின்னர் விவாதங்களில் பங்கேற்போம் என்றும் கூறினார்.