சட்டசபை தேர்தல்... சென்னையில் 13,392 கட்-அவுட், பேனர்களுக்கு 'கெட் அவுட்'
சென்னை: சென்னையில் அரசியல் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த 13 ஆயிரத்து 392 சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 4ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகளால் வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டிகள், கட் அவுட், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை அழிக்கும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திங்கட்கிழமை இரவு வரை அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த 9 ஆயிரத்து 223 சுவரொட்டிகள், பேனர்கள், விளம்பரத் தட்டிகள், சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பரங்கள், சின்னங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன.
மேலும், தனியார் சுவர்களில் வரையப்பட்டிருந்த 4 ஆயிரத்து 169 விளம்பரங்கள், விளம்பரத் தட்டிகள் மற்றும் சுவரொட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இப் பணிகள் நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சி மற்றும் அமைப்பை சார்ந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து சென்னை மாநகரில் வைக்கப்பட்டுள்ள தங்களின் விளம்பரங்களை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.