தெலுங்கானா ஸ்டைலில் விரைவில் தமிழகத்திலும் முன்கூட்டியே தேர்தல்??
சென்னை: தெலுங்கானா ஸ்டைலில் தமிழகத்திலும் முன்கூட்டியே தேர்தல் நடத்தும் ஆயத்தங்கள் தொடங்கியுள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானாவில் முன்கூட்டியே சட்டசபைக்குத் தேர்தல் நடைபெறுகிறது. அதே பாணியில் தற்போது தமிழகத்திற்கும் முன்கூட்டியே தேர்தல் நடைபெறக் கூடிய சாதகமான சூழல் கூடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகளை வைத்து முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா பாணியில்
தெலுங்கனாவில் முன்கூட்டியே சட்டசபைக்குத் தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி பாஜகவுடன் ரகசியமாக கை கோர்த்துள்ளதாக பகிரங்கமாக பேசப்படுகிறது. அதை மறுக்கவும் முடியாது. முழுப் பதவிக்காலத்தையும் முடிக்கும் வரை காத்திருந்தால் மக்களிடையே கெட்ட பெயர் ஏற்பட்டால் பாதகமாகி விடும் என்பதால் சந்திரசேகர் ராவ், சட்டசபையைக் கலைக்கும் முடிவை எடுத்தார்.
தமிழகத்திலும் அதேபோல
தற்போது தமிழகத்திலும் கூட அதே பாணியைக் கடைப்பிடிக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கும் தெலுங்கானா பாணியில் விரைவில் சட்டசபை கலைக்கப்படும் சூழல் இருப்பதாக சொல்கிறார்கள். விரைவில் இதுதொடர்பான முடிவு டெல்லி மற்றும் சென்னையால் கூட்டாக எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
லோக்சபா தேர்தல்
லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் வரவுள்ளது. அத்தோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டசபையின் ஆயுள் காலம் 2021 வரை உள்ளது. ஆனால் தற்போது தமிழக அரசியல் சூழல் படுமோசமாக உள்ளதாலும், தமிழக அரசின் கட்டுப்பாடு சென்னையில் இல்லாமல் டெல்லியில் இருப்பதாலும் முன்கூட்டியே தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது.
இடைத் தேர்தல் நடக்காமல் போனதன் காரணம்
முன்கூட்டியே சட்டசபைக்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால்தான் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலை நாசூக்காக தள்ளி வைத்து விட்டதாகவும் சொல்கிறார்கள். எது உண்மை என்பது டெல்லிக்கே வெளிச்சம். ஆனால் விரைவில் தெலுங்கானா பாணியில் தமிழகத்திலும் சட்டசபை கலைக்கப்படலாம் என்று அடித்துச் சொல்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.