ஜனவரி 8-இல் கூடுகிறது தமிழக சட்டசபை... முதல் முறையாக ஆளுநர் பன்வாரிலால் உரை
ஜனவரி 8-ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக சட்டசபை வரும் ஜனவரி 8-ஆம் தேதி கூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் முதல் நாளில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றவுள்ளார். அடுத்த நாள் 9-ஆம் தேதி சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்படும்.
பின்னர் 10, 11, 12-ஆகிய தேதிகளில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள தமிழக பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நடைபெறக் கூடும். இந்த நாட்களில் எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பு விவாதங்களையும் முன்வைக்கும்.
கூட்டதொடரின் இறுதி நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிப்பார். இந்த கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக் குழு முடிவெடுக்கும்.
ஓகி புயல் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம், ஆர்.கே. நகர் தேர்தல் ஆகியவற்றுக்கு பிறகு, நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.
ஆர்கே நகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தினகரனுக்கு சபாநாயகர் தனபால் நாளை பதவிப்பிரமாணம் செய்துவைப்பார் என்றும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் தினகரனும் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொள்வார் என்றும் தெரிகிறது.