பிப். 16ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம்: அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓ.பி.எஸ்
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 16ம் தேதி காலை 11மணிக்குத் துவங்க உள்ளதாக சட்டசபை செயலர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில், 2016-17ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
2016ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் கடந்த 20ம் தேதி துவங்கியது. ஆளுநர் ரோசைய்யா உரையுடன் துவங்கிய தொடரில் அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. கடந்த 23ம் தேதி எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்தார். அத்துடன் கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
வரும் மே மாதத்துடன் அதிமுக அரசின் ஆட்சி காலம் நிறைவடைகிறது. சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாத துவக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக அரசு தனது ஆட்சி காலம் முடியும் முன்பு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 16ம் தேதி துவங்கும் என்று சட்டசபை செயலர் அறிவித்துள்ளார்.
2016 - 17ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை 16ம் தேதி நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், மக்களை கவரும் வகையில் பல்வேறு இலவச திட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.