சட்டசபை சபாநாயகராக பதவியேற்றார் தனபால்.. துணை சபாநாயகரானார் பொள்ளாச்சி ஜெயராமன்
சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தமிழக சட்டசபை இன்று கூடியது. இன்றைய கூட்டத்தில் சட்டசபை சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நேற்று பிற்பகல் 12 மணிக்குள், மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என தற்காலிக சபாநாயகர் செம்மலை ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதிமுக சார்பில் சபாநாயகர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் ப.தனபால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் தனபாலும், துணைசபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமனும் நேற்று காலை 11 மணிக்கு சட்டமன்றச் செயலர் ஜமாலுதீனிடம் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த இரு பதவிகளுக்கும் வேறு யாரும் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சட்டசபை இன்று கூடிய உடன் சபாநாயகர், துணைசபாநாயகராக தேர்வு பெற்றவர்கள் பற்றிய அதிகாரப்பூர் தகவலை தாற்காலிகத் தலைவர் செம்மலை வெளியிட்டார். சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதன் பின், பேரவைத் தலைவர் தனபாலை அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வமும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இருக்கையில் அமர வைத்தனர். இதனையடுத்து தற்காலிக சபாநாயகர் செம்மலை விடை பெற்றார்.
இந்த நடவடிக்கைக்களுக்குப் பின்னர், பேரவைத் தலைவர் ஏற்புரை நிகழ்த்தி வருகிறார். அவரது உரைக்குப் பிறகு, அவை நடவடிக்கைகள் அனைத்தும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனபால்:
அவினாசி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தனபால் பிறந்த ஊர், சேலம் மாவட்டம் கருப்பூர்.
சேலம் தாதகாப்பட்டி பெரியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். எம்.ஏ வரலாறு படித்துள்ளார். 1972 முதல் அதிமுக மாணவர் அணி மற்றும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது நாமக்கல் மாவட்ட எம்ஜிஆர் மன்றத் தலைவராக இருந்து வருகிறார்.
1977-1989 சங்ககிரி எம்எல்ஏ ஆக இருந்தார். 1989ம் ஆண்டு சங்ககிரி தொகுதியில் ஜெயலலிதா அணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2001ல் சங்ககிரி எம்எல்ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்ட தனபால், தமிழக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தனபால் 2012 - 2016 சட்டசபையில் சபாநாயகராக இருந்தார்.
பொள்ளாச்சி ஜெயராமன்:
1989ம் ஆண்டு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிளவுற்றிருந்தபோது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் மேட்டுப்பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றார்.
1996ம் ஆண்டு அதிமுக சார்பாக பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குப் போட்டியிட்டு தோற்றார். 2001ம் ஆண்டு பொள்ளாச்சி சட்டசபை தொகுதியிலிருந்து வெற்றி பெற்று, தொழில்துறை அமைச்சராக சிறிது காலம் பதவி வகித்தார்.
2004ம் ஆண்டில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு 2006-ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார்.
2006ல் மீண்டும் பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் உடுமலைப்பேட்டை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2012 முதல் 2016 வரை சட்டமன்ற துணை சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.