நெருங்கும் சட்டசபைத் தேர்தல்.. "பொட்டி" வர ஆரம்பிச்சிருச்சு!
சென்னை: தமிழக சட்டசபைக்கு எப்போது தேர்தல் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிமிருந்தும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தமிழகத்திற்கு வர ஆரம்பித்து விட்டன.
15வது தமிழக சட்டசபையைத் தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தனது முன்னேற்பாடுகளைத் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தமிழகத்தை நோக்கி வர ஆரம்பித்துள்ளன.
வாக்குப் பதிவு இயந்திரங்கள்
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
சேலத்திற்கு வந்த இயந்திரங்கள்
சேலத்திற்கு 2762 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்து சேர்ந்துள்ளன. இவை புனே நகரிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.
நீலகிரிக்கு வந்த கோலாப்பூர் இயந்திரங்கள்
இதேபோல மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு 952 மின்னணு இயந்திரங்கள் வந்துள்ளன.
ராஜேஷ் லக்கானி தகவல்
இதுகுறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில் இதுவரை நீலகிரி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு 3712 மின்னணு இயந்திரங்கள் வந்துள்ளன. மேலும் 75,000 இயந்திரங்கள் இந்த மாத இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கிறோம்.
சென்னைக்கும் வருகின்றன
இதேபோல சென்னைக்கு இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றார் ராஜேஷ் லக்கானி.
ஜனவரி 20ல் இறுதி வாக்காளர் பட்டியல்
மேலும் அவர் கூறுகையில் ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம்கள் தொடங்கும் என்றார்.