பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின் அதிமுக "முறைப்படி" உடையும்?
சென்னை: தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுவது பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சட்டசபையில் என்ன நடக்கப் போகிறது என்பதுதான். அதிமுக "முறைப்படி" பட்ஜெட் கூட்டத் தொடரின்போது உடையப் போவதாக ஒரு புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பல பரபரப்பான நிகழ்வுகளை தமிழகம் சந்திக்கப் போவதாகவும் அரசியல் கட்சிகள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இதுவரை நாம் கண்டவை வெறும் டிரெய்லர்தான் என்றும் இனிமேல்தான மெயின் பிக்சரே வரப்போகிறது என்றும் சொல்கிறார்கள்.
அதிமுக தரப்பிலிருந்து பலரை இழுக்க பெரும் முயற்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், அது பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அரங்கேறலாம் என்றும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பிரிந்து கிடக்கிறது. ஆனால் இன்னும் அது முடங்கிப் போய் விடவில்லை. காரணம், சின்னம் உள்ளிட்ட எதுவும் முடக்கப்படவில்லை. அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை. எனவே அது அதிகாரப்பூர்வமாக இன்னும் உடையவில்லை.
ஓ.பி.எஸ்ஸால் முடியவில்லை
ஓ.பி.எஸ். அதிமுகவிலிருந்து புரட்சி செய்து வெளியே வந்தாரே தவிர அவரால் அதிமுகவை உடைக்க முடியவில்லை. எம்.எல்.ஏக்களையும் பெரியஅளவில் இழுக்க முடியவில்லை. எடப்பாடி அரசு தொடருவதையும் தடுக்க முடியவில்லை.
பிரம்ம பிரயத்தனம்
இருப்பினும் தற்போது பல்வேறு முனைகளில் எடப்பாடி பழனிச்சாமி அரசை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக பேச்சு அடிபடுகிறது. அக்கட்சியிலிருந்து கணிசமான எம்.எல்.ஏக்களை இழுக்கும் முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின்போது
தற்போது தமிழக அரசு தனது பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. பட்ஜெட் என்பது மிக முக்கியமானது. எனவே இந்த சமயத்தில் அரசை நிர்மூலமாக்க யார் முயற்சி செய்தாலும் அது அரசியல் சட்ட சிக்கலுக்கு வழி வகுத்து விடும் என்பதால்தான் ஆட்சி கவிழ்ப்பு மற்றும் கட்சி உடைப்பு வேலைகள் மெதுவாக நடப்பதாக சொல்கிறார்கள்.
மாஃபா சூசகம்
மாஃபா பாண்டியராஜன் கூட சமீபத்தில் பேசுகையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புகள் முடிந்து போய் விடவில்லை. இன்னும் உள்ளன. நிறைய நிகழ்வுகளை, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளை நாம் காணவுள்ளோம் என்று கூறியிருந்தார். இதுவும் கூட பல சந்தேகங்களை வலுப்படுத்துவதாக உள்ளது.
பட்ஜெட்டை நிறைவேற்றிய பின்னர்
எனவே பட்ஜெட்டை சட்டசபையில் நிறைவேற்றும் வரை காத்திருந்து விட்டு, அதன் பின்னர் சித்து வேலைகள் சூடு பிடிக்கும் என்று சொல்பப்படுகிறது. அனேகமாக பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவில் பல திருப்பங்களை தமிழகம் சந்திக்கலாம் என்று சொல்கிறார்கள்.