அனல் பறக்கும் அரசியல் சூழலில் சட்டசபை கூட்டம்...ஜூன் 14 முதல் தொடங்குது அதகளம்!
தமிழக சட்டசபை மானிய கோரிக்கைகளை நிறைவேற்ற வரும் 14-ந் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக சட்டசபை மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வரும் 14-ந் தேதி காலை 10 மணிக்குக் கூடும் என்று சட்டசபை செயலாளர் பூபதி அறிவித்தள்ளார்.
2017-18 நிதியாண்டிற்கான பட்ஜெட் கடந்த மார்ச் 16ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து 4 நாட்கள் மட்டுமே பட்ஜெட் கூட்டம் நடந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக பட்ஜெட் கூட்டம் முடிவதாகவும் தேர்தலுக்குப் பின் சட்டசபைஇ கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தான போதும் பட்ஜெட் கூட்டப்படாததால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடந்த மாதம் சபாநாயகரை சந்தித்து சட்டசபையை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மே மாத இறுதியில் சட்டசபை கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 14ம் தேதி சட்டசபை கூட்டப்படும் என்று செயலாளர் பூபதி அறிவித்துள்ளார்.
ஜூன் 14ம் தேதி காலை 10 மணியளவில் சட்டசபை கூடுகிறது. இந்த கூட்டத்தின் போது துறை ரீதியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.
மாட்டிறைச்சி மீதான தடை, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் சரியான முறையில் செயல்படாத மாநில அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும். அதிமுகவில் நிலவும் குழப்பங்கள், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் ஒப்புதல் அளிக்கும மாநில அரசைக் கண்டித்து சட்டசபையில் அனல் கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று அன்றைய அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.