இன்று கூடுகிறது சட்டசபை.. ரோசய்யா உரையுடன்.. எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கலாம்!
சென்னை: தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் கே.ரோசய்யாவின் உரையுடன் தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். முதல் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தில் மாநில ஆளுநர் உரையாற்றுவார். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல்நாள் கூட்டத்தில் காலை 11.15 மணிக்கு கே.ரோசய்யா உரையாற்றுகிறார்.
உரை நிகழ்த்துவதற்காக கே.ரோசய்யா இன்று காலையில் சட்டசபைக்கு வருவார். அவரை மரபுப்படி சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். அங்குள்ள சபாநாயகர் இருக்கையில் ரோசய்யாவை அமர வைப்பார்கள். அதைத் தொடர்ந்து ஆளுநர் உரை நிகழ்த்துவார்.
ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடிந்த பிறகு அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். அதைத் தொடர்ந்து அவை நிகழ்ச்சிகள் முடிக்கப்படும். பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தொடரில் எத்தனை நாட்கள் சட்டசபையை நடத்துவது? என்பது பற்றி இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன்மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெறும். அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சில நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு இறுதி நாளில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து உரையாற்றுவார்.
டெங்கு காய்ச்சல், ராணிப்பேட்டை கழிவுநீர் தொட்டி உடைந்து 10 பேர் இறந்த சம்பவம், தமிழக அரசின் திட்ட செயல்பாடுகள் போன்ற பல பிரச்சினைகளை இந்தத் தொடரில் எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கலாம். இன்றைய ஆளுநர் உரையை திமுக புறக்கணிக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.