விவசாயிகளுக்கு ஆதரவாக பந்த் - ஓசூர், திருச்சியில் பஸ்கள் சிறைபிடித்த திமுகவினர் கைதாகி விடுதலை
முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி திருச்சி, ஓசூரில் திமுகவினர் பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி, ஓசூரில் பேருந்துகளை சிறை பிடித்து போராட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கடந்த 41 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்கட்சியான திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது. அதில் ஏப்ரல் 25ஆம் தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
முழு அடைப்பு போராட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறா வண்ணம் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். மாலை 6 மணிக்கு போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து இயல்பு நிலை திரும்பியது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் முக்கிய மாவட்ட தலைநகரங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு மாலை 6 மணி வரை லாரிகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் எதுவுமே இயங்கவில்லை. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
போராட்டத்திற்கு ஆதரவு
முழு அடைப்பு போராட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. மாலை 6 மணிக்கு மேல் இயல்பு நிலை திரும்பியது.
திருச்சியில் மறியல்
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி பேருந்து நிலையம் அருகே திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய, மாநில அரசுளை வலியுறுத்தி முழக்கமிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஓசூரில் பஸ் சிறைபிடிப்பு
ஓசூர் அருகே பாகலூரில் கர்நாடக அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.