விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் அமைதியாக முடிந்தது - அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு!
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடைபெற்றது. சில இடங்களில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன.
சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.
வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கடந்த 41 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்கட்சியான திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது. அதில் ஏப்ரல் 25ஆம் தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
இன்று காலை முதல் பல இடங்களில் பஸ் மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மேல்மருவத்தூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்செந்தூர் - சென்னை, சென்னை - குருவாயூர் ரயிலை மறித்தவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல புதுவையில் இருந்து சென்னை வந்த தமிழக அரசு பேருந்து மீது கல்வீசப்பட்டது. பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற தமிழக அரசுப்பேருந்து மீது கற்கள் வீசப்பட்டதில் கண்ணாடிகள் உடைந்தன. பேருந்து மீது கற்கள் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.