தமிழகத்தில் வரும் காலத்திலும் பாஜக கூட்டணி தொடரும்... தமிழிசை சவுந்திரராஜன்
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனபோதும், தேசிய அளவில் அதிக இடங்களைப் பிடித்த பாஜக விரைவில் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில், நேற்று சென்னையை அடுத்த தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன்.
அப்போது அவர் கூறியதாவது:-
நன்றி...
பிரதமரை தேர்வு செய்யும் கூட்டத்தில் கலந்து கொள்ள விடுத்த அழைப்பை ஏற்று அதில் கலந்து கொண்ட தமிழக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பின்னடைவுக்குக் காரணம்...
கூட்டணி அமைக்க காலதாமதம் ஆனதாலும், அ.தி.மு.க. போன்ற கட்சிகள் களத்தில் முன்னரே பிரசாரத்தை தொடங்கி விட்டதாலும், அ.தி.மு.க. ஆளும் கட்சி என்பதாலும் எங்கள் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
கட்டமைப்பு வசதிகள் இல்லை...
கூட்டணி கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் அதிக அளவு உழைத்தார்கள். ஆனால் அடிப்படை கட்டமைப்பு இன்னும் பலப்படுத்தவேண்டும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். மோடி அலை தமிழகத்தில் இருந்தது. அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை. இன்னும் பலம் பொருந்திய கட்சியாக தமிழகத்தில் நாங்கள் மாற வேண்டும். மோடி அலையை வாக்குகளாக மாற்றக்கூடிய கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் எங்களிடம் இல்லை.
தமிழகத்திற்கான அங்கீகாரம்...
கூட்டணி கட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்களா? என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும். நிச்சயமாக தமிழகத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அமைச்சர் சபையில் மத்திய தலைமை கொடுக்கும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.
கூட்டணி தொடரும்...
வரும் காலத்திலும் எங்கள் கூட்டணி தொடரும். பா.ஜனதா கூட்டணியில் தமிழகத்தில் எல்லா கட்சி தலைவர்களும் சிறப்பாக பிரசாரம் செய்தனர்.
மாற்றத்தை கொண்டு வர நினைத்தோம்....
மாற்றத்தை கொண்டு வர நினைத்தோம். 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து உள்ளனர். தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி தோல்வி அடையவில்லை. பின்னடைவுதான் ஏற்பட்டு உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.