தமிழக பாஜக செயற்குழு வரும் 23-ல் கூடுகிறது- தலைவர் தமிழிசை மாற்றம் இல்லை?
தமிழக பாஜக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடக்க உள்ளது. இதில், தமிழிசைக்கு பதிலாக புதியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: தமிழக பாஜகவின் செயற்குழு கூட்டம் வரும் 23ல் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் நீக்கப்பட்டு, புதியத் தலைவர் நியமிக்கப்படுவார் என்கிற தகவல் வெளியானது. இதை தமிழிசை தரப்பு மறுத்துள்ளது
தமிழக பாஜக தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, 2017 செப்டம்பரில் தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார்.
ஆனால், தமிழகத்தில் பாஜக பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. இந்தாண்டு ஆர்.கே. நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், நோட்டாவைவிட குறைந்த வாக்குகளே பாஜகவுக்கு கிடைத்தது.
ஏற்கனவே தமிழிசையை மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜகவில் உள்ள பல கோஷ்டிகள் படுதீவிரமாக வேலை பார்த்து வந்தன. ஆனால், தனது சொந்த லாபியில், அவர் தொடர்ந்து பதவியை தக்க வைத்து வைத்தார்.
தமிழக பாஜக நிர்வாகிகளிடம், கட்சித் தலைமை ஏற்கனவே ராஜினாமா கடிதம் வாங்கியது. தமிழிசை ராஜினாமா செய்துவிட்டதாக ஜனவரியிலேயே தகவல் வெளியானது ஆனால், பதவியை ராஜினாமா செய்யவே இல்லை என ஒன் இந்தியா தமிழிடம் தெரிவித்திருந்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
[Read This: தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு ]
இந்த நிலையில், தமிழக பாஜகவின் செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதில் தமிழிசைக்கு பதிலாக புதியத் தலைவர் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த முறையும் தமிழிசை தரப்பு இத்தகவலை மறுத்து வருகிறது. தேசிய செயற்குழுக் கூட்டத்திலேயே தமிழிசை சவுந்தரராஜனின் பணிகளை பாராட்டியவர் பாஜக தலைவர் அமித்ஷா. ஆகையால் நிச்சயம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களுக்கு சீட் தரப்போவது தமிழிசைதான். தலைவர் பதவிக்கு முண்டியடிக்கும் ஒருதரப்புதான் இப்படியான செய்திகளை பரப்புகிறது என்கிறது தமிழிசை தரப்பு.