தமிழக பாஜகவின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு... இனி மேலிடத்தின் கையில்... இல.கணேசன்
சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தமிழக பாஜக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டது; இனி கட்சி மேலிடம்தான் இறுதி முடிவெடுக்கும் என்று மூத்த பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் அல்லாத கட்சிகள் ஏதேனும் ஒன்றாவது கூட்டணிக்கு வந்துவிடாதா என தவித்துக் கொண்டிருக்கிறது பாஜக. தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ஆகியோரை பலமுறை தமிழக பாஜக தலைவர்கள் சந்தித்து பேசிவிட்டனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டணி தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டோம்.
எங்களது கருத்துகள், முடிவுகளை அறிக்கையாக கட்சி மேலிடத்துக்குக் கொடுத்துவிட்டோம். இனி முடிவெடுக்க வேண்டியது மேலிடம்தான். தமிழக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்து கூட்டணி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார். அதனைத் தொடர்ந்து கூட்டணி இறுதிவடிவம் பெறும்.
அடுத்து வரும் ஓரிரு நாட்களில் கூட்டணி இறுதிவடிவம் பெற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிடுவோம்.
இவ்வாறு இல. கணேசன் கூறினார்.