ஆந்திர போலீஸாரின் அராஜக துப்பாக்கிச் சூடு மிகப் பெரிய தவறு... தமிழசை செளந்தரராஜன் கடும் கண்டனம்
சென்னை: தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திரப் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியது மிகப் பெரிய தவறு. தவறு செய்திருந்தால் கைது செய்து விசாரணைதான் நடத்தியிருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே வனப்பகுதியில், செம்மரக் கட்டைகளை வெட்டிய தொழிலாளர்கள் மீது ஆந்திரப் போலீஸார் அராஜகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 பேர் பலியானார்கள். இதில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
தமிழக மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஆந்திர போலீஸாரின் செயல். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்தத் தமிழக கட்சியும் கண்டனம் தெரிவிக்காத நிலையில், தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தவறு. அவர்கள் தவறு செய்திருந்தால், விசாரணை தான் செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழிசை.