ஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'
ஆர்.கே நகர் தேர்தல் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க பலமாக கால் ஊன்றும் என்று தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை : ஆர்.கே நகர் தேர்தலின் மூலமாக தமிழகத்தில் பா.ஜ.க பலமாக கால் ஊன்றும். வளர்ச்சி வேண்டும் மக்கள் நிச்சயம் பா.ஜ.க.,விற்கு தான் வாக்களிப்பார்கள் என்று தமிழிசை செளந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வருகிறார். இதனையொட்டி பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கன்னியாகுமரி செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் பா.ஜ.க பலமாக இருப்பதையே காட்டுகின்றன. இதை காங்கிரஸ் மட்டுமல்ல அனைத்து கட்சிகளும் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.
நாடு முழுவதும் பா.ஜ.க அலை
இது ஒரு தடுமாற்றமான வெற்றி என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சித்தரித்து வருகின்றன. ஆனால், தேர்தல் முடிவுகள் இரண்டு மாநிலங்களிலும் நாங்கள் பெரும்பான்மையான வெற்றி பெற்று இருப்பதை எடுத்து காட்டுகின்றன. நாடு முழுவதும் இன்னமும் பா.ஜ.க அலை தான் வீசுகின்றது. இதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது தான் உண்மை.
கடன் மேல் கடன்
தமிழகம் வளர்ச்சியில் பின் தங்கி இருப்பதற்கு காரணம் இங்கு ஆண்டு வரும் திராவிடக்கட்சிகள் தான். வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாமல், இரண்டு திராவிடக்கட்சிகளும் ரூபாய் 30 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி வைத்து உள்ளார்கள். இங்கு ஊழல் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் அப்போது தான் தமிழகம் சிறக்கும்.
திருமாவளவனுக்கு கேள்வி
ஆர்.கே நகர் தேர்தலில் தொடர்ந்து பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் புகார் கூறி உள்ளார். ஆனால், பணப்பட்டுவாடா காரணத்தை வைத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டு விடக்கூடாது என்று தி.மு.க.,விற்கு ஆதரவு தரும் திருமாவளவன் கூறுகிறார். அப்படி என்றால் பணப்பட்டுவாடா செய்பவர்களுக்கு அவர் ஒத்துழைப்பு தருகிறாரா?
பா.ஜ.க.,விடம் மட்டுமே நம்பிக்கை
ஆர்.கே நகர் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். அந்த தொகுதி கடந்த 30 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருக்கிறது. எதிலும் இல்லாத வளர்ச்சி அங்கு டாஸ்மாக் கடைகளில் மட்டும் தான் இருக்கிறது. இதை எல்லாம் மாற்ற மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தல் மூலம் பா.ஜ.க பலமாக தமிழகத்தில் கால் ஊன்றும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.