''சென்னை சே.. பொன்னார் ஆராஹு''...மோடிக்காக பிரச்சாரம் செய்ய கிளம்பும் தமிழக பாஜக தலைவர்கள்!
சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி போட்டியிடும் வாரனாசி மற்றும் வதோதராவில் அவருக்கு வாக்கு சேகரிக்க தமிழக பாஜக தலைவர்கள் செல்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வாரனாசி மற்றும் வதோதரா ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தமிழக பாஜக தலைவர்கள் வாரனாசி மற்றும் வதோதராவுக்கு செல்கிறார்கள்.
தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் வாரனாசியில் கோவை பாஜக வேட்பாளரும், முன்னாள் மாநில தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். அவருக்கு இந்தி மற்றும் ஆங்கிலமும் தெரியும் என்பதால் பிரச்சாரம் செய்வதில் சிக்கல் இல்லை.
சிவகங்கை பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா வதோதரா பகுதியில் மோடிக்காக வாக்கு சேகரிக்கவிருக்கிறார். ராஜா இந்தியில் சரளமாக பேசுவார். அவர்கள் தவிர பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் பிரச்சாரத்திற்கு செல்கிறார்கள்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதியில் களத்தில் இருக்கும் பாஜக வேட்பாளரான நடிகை ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் அமேதி சென்றுள்ளார். அங்கு அவர் ஸ்மிரித்திக்கு வாக்கு சேகரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.