விஜயகாந்த் பின்னாடி ஓடி 'டயர்ட்' ஆகி இப்போது தங்களது தொகுதிகளைத் தேடும் பாஜக தலைவர்கள்!
சென்னை: மோடி கட்சியா இது.... என்று ஆச்சரியப்படும் அளவுக்கு தமிழக பாஜகவினர் சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகளில் பெரும் சொதப்பு சொதப்பி வருகின்றனர். கூட்டணிக்காக தங்களது பெரும்பாலான எனர்ஜியை வீணடித்து விட்ட பாஜக தலைவர்கள் இப்போது தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த கவலையில் மூழ்கி விட்டனராம்.
தேமதிக வரும், விஜயகாந்த் கைவிட மாட்டார், பிரேமலதா சம்மதிப்பார் என்று ரொம்ப நம்பிக் கொண்டிருந்தது பாஜக. இதற்காக வேலை வெட்டியையெல்லாம் விட்டு விட்டு தேமுதிக பின்னாடியே திரிந்தனர்.
ஆனால் தேமுதிக தொடர்ந்து டேக்கா கொடுத்துக் கொண்டிருக்கிறது. விஜயகாந்த் வருவாரா, இல்லையா என்பதே தெரியவில்லை. இதனால் வெறுத்துப் போய் விட்ட பாஜக தலைவர்கள் தற்போது புதிய கவலையில் மூழ்கியுள்ளனர்.
போட்டியிடும் தொகுதிகள்
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அத்தனை பேரும் தாங்கள் போட்டியிட சாதகமாக உள்ள தொகுதிகள் குறித்த வேட்டையில் குதித்துள்ளனர்.
தமிழிசை
மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சென்னை, கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியைத் தேர்வு செய்து வைத்துள்ளாராம்.
சென்னையில் போட்டியிட வாய்ப்பு
குறிப்பாக சென்னை வேளச்சேரியில் அவர் போட்டியிட வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர். இதுதவிர நாடார் சமுதாயத்தினர் அதிகம் உள்ள ராதாபுரம் தொகுதியை அவர் விரும்புகிறார். அதேசமயம் சிங்காநல்லூர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளையும் அவர் குறி வைத்துள்ளார்.
வானதி சீனிவாசன்
மாநிலத் துணைத் தலைவரான வானதி சீனிவாசன் மிகத் தெளிவாக உள்ளார். சென்னை என்றால் மயிலாப்பூர், சொந்த மாவட்டமான கோவை என்றால் கோவை தெற்கு என தெளிவாக இரு தொகுதிகளைத் தேர்வு செய்து வைத்து விட்டுக் காத்திருக்கிறாராம்.
எச்.ராஜா
தேசியச் செயலாளரான எச்.ராஜாவுக்கு சொந்த மாவட்டமான சிவகங்கையில் எந்தத் தொகுதியிலும் போட்டியிட விருப்பமில்லையாம். எனவே சென்னையில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம்.
மற்றவர்கள்
இவர்கள் தவிர மற்ற பாஜக நிர்வாகிகளும் தங்களுக்குச் சாதகமான தொகுதிகளை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் வேலையில் இறங்கியுள்ளனராம். வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறவுள்ளது அப்போது தொகுதிகள் முடிவு செய்யப்படுமாம்.