தமிழக பாஜகவினர் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகின்றனர்: முத்தரசன்
தமிழக பாஜகவினர் தொடர்ந்து மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வருகின்றனர் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் : பாஜகவைச் சேர்ந்த தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழக மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு, போராட்டத்தில் சமூக விரோதிகளின் வன்முறையே காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், ரஜினி துணிச்சலாக உண்மையைப் பேசி இருக்கிறார். உண்மையப் பேசுவதற்கு எந்தக் கட்சியாக இருந்தாலும் பயப்பட வேண்டியது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், போராட்டத்தில் சமூக விரோதிகளால்தான் வன்முறை வெடித்தது. அந்த பயங்கரவாதிகள் யார் என்று தமிழக அரசு உடனடியாக அடையாளம் காண வேண்டும். போராட்டத்தில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு இருந்தால் அவர்களைக் கொன்ற போலீஸாருக்கு சன்மானம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து திருவாரூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் பேசுகையில், தமிழக மக்களின் போராட்டத்தை தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அவையில் விவாதிக்க வலியுறுத்தி திமுக சட்டசபையை புறக்கணித்து இருப்பது சரியான முடிவு. அமைதியான முறையில் போராடுபவர்களை இந்த அரசு ஒடுக்கப்பார்க்கிறது. வேல்முருகனை தேசத் துரோக வழக்கில் கைது செய்திருப்பது, கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.