இல. கணேசன், லட்சுமணன்.. ஆளுநராக தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள்?
சென்னை: தமிழக பாரதிய ஜனதாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு ஆளுநர் பதவிகளைக் கொடுக்க மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த ஒரு செல்வாக்கும் இல்லை. இங்கு இருக்கிற மிகச் சிறு கட்சிகளில் பாரதிய ஜனதாவும் பத்தோடு பதினொன்றுதான்..
ஆனால் தமிழகத்தில் பெரும் செல்வாக்குடன் பா.ஜ.க. இருப்பதாக நம்பிக் கொண்டு டெல்லி மேலிடத்துக்கு தகவல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில் இதற்காக மெகா கூட்டணியெல்லாம் அமைத்தார்கள்.
ஆனால் போணியானது பொன். ராதாகிருஷ்ணன் ஒருவர்தான்.. அவர் மத்திய அமைச்சராகிவிட்டார்.. சரி மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடக்கும் போது மாநிலத் தலைவராகிவிடலாம் என முட்டி மோதினர் மூத்த தலைவர்கள்.. கடைசியாக தமிழிசைக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது..
அதன் பின்னர் ராஜ்யசபா எம்.பி. பதவி உட்பட ஏதாவது ஒரு பதவி கிடைத்திடாதா? என மாங்கு மாங்கென மல்லுக் கட்டிக் கொண்டும் டி.வி.,க்களில் பேசிக் கொண்டிருந்தனர் அக்கட்சியினர்.. இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மத்திய அரசு வழக்கறிஞர் பதவி உட்பட ஒன்றிரண்டும் கிடைத்துவிட்டன..
இருப்பினும் லட்சுமணன். இல. கணேசன் போன்ற சீனியர்கள் எங்கேயே ஒரு மாநிலத்துக்கு ஆளுநராகவாவது நியமியுங்கள் என்கிற வகையில் சில லாபிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதெல்லாம் சாத்தியமா எனத் தெரியவில்லை என்று தகவல் வந்த கையோடு போனால் போகட்டும் என இருவரையும் பரிந்துரைத்து தமிழக பா.ஜ.க., டெல்லி மேலிடத்துக்கு கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளதாம்..
இலவுகாத்த கிளிகள்?