தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக போர்க்கொடி! வெடித்தது பாஜக கோஷ்டி பூசல்!!
கருப்பு பண பதுக்கல் பேர்வழிகளுக்கு உடைந்தையாக இருந்த கட்சி நிர்வாகியை நீக்க மறுத்து வருவதால் தமிழிசை சவுந்தராஜனுக்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியிலும் காங்கிரஸ் பாணியில் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாரதிய ஜனதாவின் இளைஞரணித் தலைவராக இருப்பவர் வினோஜ். இவர் சென்னை செக்கர்ஸ் ஹோட்டல் உரிமையாளர் பன்னீர்செல்வத்தின் மகன்.
அதிரடி ரெய்டு
அண்மையில் வினோஜ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பதுக்கி வைத்த செல்லா ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற உடந்தையாக இருந்தார் என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
கிடுக்குப்பிடி ரெய்டு
இச்சோதனையைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் வினோஜை நேரில் வரவழைத்து கிடுக்குப்பிடி விசாரணையும் நடத்தினர். கருப்பு பணத்தை ஒழிப்பதாக சொல்லும் பாஜகவில் கருப்பு பண பதுக்கல் பேர்வழிகளுக்கு உடந்தையாக இருந்த வினோஜ் தொடர்ந்து பதவியில் நீடிக்க கூடாது என அவருக்கு எதிர்கோஷ்டி வலியுறுத்தி வந்தனர்.
தமிழிசைக்கு சிக்கல்
ஆனால் தமிழிசை சவுந்தரராஜனோ, கருப்பு பண பதுக்கல் பேர்வழிகளுக்கு உடைந்தையாக இருந்த வினோஜை பதவி நீக்கம் செய்ய மறுத்து வந்தார். இதனால் பாஜக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
நீக்க கோரிக்கை
இதையடுத்து தமிழிசை சவுந்தராஜன் மற்றும் வினோஜ் இருவரையும் மாற்றக் கோரி தற்போது எதிர்கோஷ்டியினர் டெல்லிக்கு புகார் பட்டியலை தொடர்ச்சியாக அனுப்பி வருகின்றனர். இதனால் தமிழிசை சவுந்தராஜனின் தலைவர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.