எச் ராஜாவுக்கு அட்மின் பதிவு... எஸ்.வி சேகருக்கு பார்வேட் பதிவு... நல்லா சொல்றாங்க காரணம்!
சமூக வலைதளங்களில் அசம்பாவிதமான கருத்துகளை பதிவிட்டுவிட்டு பின்வாங்குவதற்கு பாஜகவினர் புதுப்புது காரணங்களை சொல்லி வருகின்றனர்.
Recommended Video
சென்னை : சமூக வலைதளங்களில் பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை பதிவிட்டுவிட்டு அதில் இருந்து பின்வாங்க அட்மின் போட்ட பதிவு, பதிவை படிக்காமல் பகிர்ந்துவிட்டேன் என்று பாஜகவினர் காரணங்களை சொல்லி வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்த நிலையில் பார்வேர்டு பதிவை படிக்காமல் போட்டுவிட்டேன் என்று ஜகா வாங்கியுள்ளார் எஸ்.வி.சேகர்.
மத்திய அரசின் திட்டங்களையோ, பிரதமர் நரேந்திர மோடியையோ, பாஜகவையோ விமர்சித்தால் அதற்கு பதிலாக தரக்குறைவான வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளவர் அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா. திரிபுராவில் பாஜக ஆட்சியை கைப்பற்றிய அடுத்த நாளே புரட்சியாளர் லெனின் சிலை அகற்றப்பட்டது.
லெனின் சிலை அக்கற்றப்பட்டதை சுட்டிக்காட்டி எச். ராஜாவின் முகநூலில் இன்று லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழகத்தில் எதிர்காலத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று ஒரு பதிவை போட்டிருந்தார். அந்த சமயத்தில் எச். ராஜா டெல்லியில் இருந்தார். தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என்று எச். ராஜா போட்ட பதிவால் தமிழகத்தில் பிரச்னை வெடித்தது. எச்.ராஜாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
அட்மினை காரணம் சொன்ன ராஜா
இந்நிலையில் தனது பதிவு குறித்து விளக்கமளித்த எச். ராஜா, இது தனக்கு தெரியாமல் தன்னுடைய அட்மின் போட்ட பதிவு என்று பின்வாங்கினார். எனினும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் கருணாநிதி பற்றியும், கனிமொழி பற்றியும் அநாகரிகமான கருத்தை பதிவிட்டிருந்தார் எச். ராஜா.
எதிர்ப்பலைகளுக்கு நடுவே நீந்தும் ராஜா
எச். ராஜாவின் இந்த பதிவிற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதிலும் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். விமர்சனங்கள் என்ற பெயரில் தனக்கு தோன்றுவதையெல்லாம் அறுவறுக்கத்தக்க கருத்துகளாக பதிவிட்டு வரும் எச். ராஜாவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எச். ராஜா மனநல சிகிச்சை பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் கூறி இருந்தார்.
பத்திரிக்கையாளர்கள் பற்றிய அவதூறு பதிவு
இதனிடையே ஆளுநர் பெண் நிருபரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில் திருமலை என்பவரின் பதிவை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி. சேகர் நேற்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பெண் செய்தியாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் வரிக்கு வரி ஆபாச அர்ச்சனைகளாக இருந்தது அந்த பதிவு. பல்கலைக்கழகங்களை விட மீடியாக்களில் தான் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக மிகவும் கீழ்த்தரமாக இருந்தது அந்த பதிவு
போராட்ட களம் கண்ட பத்திரிக்கையாளர்கள்
எஸ்.வி சேகர் இந்த கருத்தை பகிர்ந்ததையடுத்து பத்திரிக்கையாளர்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது. பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டும் செய்தியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் படிக்காமல் திருமலை சா என்பவரின் கருத்தை பகிர்ந்துவிட்டதாக எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த சம்பவத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிக்கை சகோதரிகளுக்கும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன் என்று எஸ்.வி. சேகர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அரசியல் பொதுவாழ்வில் ஏற்கக் கூடியதா?
பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிட்டு அதற்கு அட்மின் போட்ட பதிவு, படிக்காமல் பார்வேர்டு செய்துவிட்ட பதிவு என்று பாஜகவினர் புதுப்புது காரணங்களை கூறுகின்றனர். அரசியல் பொதுவாழ்வில் இருப்பவர்கள் இது போன்று காரணங்கள் கூறுவது சரியானது தானா?அல்லது அவர்கள் சார்ந்துள்ள தேசிய கட்சிக்குத் தான் இது அழகா என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது.