சட்டம் ஒழுங்கு சரியா இருக்குன்னு சொல்றது கேலிக்கூத்தால்ல இருக்கு - வைகோ
தமிழ்நாட்டில் கொலை கொள்ளைகள் அதிகரித்து மக்கள் கவலைப்படும் நிலையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பது கேலிக்கூத்து என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்கொடுமைகள், கொலை, கொள்ளை பற்றிய செய்திகள் அன்றாட நிகழ்வுகளாகி வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகக் கூறுவது கேலிக் கூத்து என்று வைகோ கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று 2018-19-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் பற்றி வைகோ கருத்து கூறியுள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
2018-19-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் புதிதாக எந்தத் திட்டங்களும் இல்லை. நிதி நலை அறிக்கை குறித்த குறிப்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைக் குறிப்பிடாதது கண்டனத்துக்கு உரியதாகும்.
நிதி ஒதுக்கீடு இல்லை
14வது நிதிக்குழு தமிழகத்திற்கு பரிந்துரை செய்த அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டது. கடந்த மூன்று ஆண்டு காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு ரூ.81,570 கோடி. ஆனால், மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது ரூ.72,534 கோடி மட்டுமே. நிதி ஒதுக்கீடு அளவையும் 14-வது நிதிக்குழு 4.969 விழுக்காட்டிலிருந்து 4.023 விழுக்காடாகக் குறைத்துவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம்
மத்திய அரசின் அநீதி, மாநில உரிமைகள் பறிப்பு இவற்றை வரவு செலவுத் திட்டத்தில் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவும் போதிய அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
நிதிப் பற்றாக்குறை
2018-2019-ம் ஆண்டில் தமிழகத்தின் மொத்தக் கடன் 3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடி ரூபாய் ஆகும். கடந்த ஆண்டைவிட 41,479 கோடி ரூபாய் அதிகரித்து இருக்கிறது. மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவைக் கடன் அளவு 25 விழுக்காட்டுக்குக் கீழே இருப்பதாக கூறப்பட்டாலும், நிதிப் பற்றாக்குறை 23,176 கோடி ரூபாய் ஆகவும் வருவாய் பற்றாக்குறை 17490.58 கோடி ரூபாய் ஆகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உதய் திட்டம்
இந்நிலையில், வரும் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக இருக்கும் என்பது எப்படி சாத்தியமாகும்? உதய் மின் திட்டத்தில் இணைந்தால் ரூ.1335 கோடி சேமிப்பு ஏற்படும் என்று கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துவிட்டு, இப்போது உதய் திட்டத்தால் மின் வாரியம் நட்டத்தைச் சந்தித்து வருவதாகத் தெரிவிப்பது முரணாக உள்ளது.
அதிமுக துணை போவதா?
வேளாண் துறையில் நீடித்த வளர்ச்சி என்பது அதிமுக அரசின் வெற்று அறிவிப்பு. நடைமுறையில் வேளாண்துறை கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கி முற்றாக அழிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஜனவரி 19 ஆம் தேதி மத்திய அரசு ‘குளோபல் டென்டர்' விட்டுள்ளது. மத்திய அரசின் நாசகாரத் திட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு துணைபோயிருப்பது இந்த நிதிநிலை அறிக்கையில் அப்பட்டமாகத் தெரிகிறது. இதுகுறித்து கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
அலட்சியம் செய்வதா?
வேளாண் உற்பத்தியை 110 இலட்சம் மெட்ரிக் டன் என்று இலக்கு நிர்ணயித்துள்ள தமிழக அரசு, நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,000 ஆகவும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 ஆகவும் கொள்முதல் விலை தீர்மானிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி வருவது ஏன்? கரும்பு விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 2,000 கோடியை பெற்றுத் தராமல், கரும்பு உற்பத்திக்கு ஊக்கத் தொகை ரூ. 200 என்று அறிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு ஆகும்.
உள்ளாட்சி தேர்தல்
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்திட ரூ. 1,781 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத் தக்கது என்றாலும், இத்திட்டத்தை விரைந்து தொடங்கினால்தான் நம்பிக்கை ஏற்படும். தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான தீர்வு எதுவும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் பற்றிய திட்டவட்டமான அறிவிப்பு இல்லாதது கண்டனத்துக்கு உரியது.
தமிழ் வழக்காடு மொழி
செம்மொழி தமிழ் உயர் ஆய்வு மையத்தை திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்க்காததும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்க கோரிக்கை விடுக்காததும் இந்த அரசின் நிலைப்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
தமிழக அரசு அலட்சியம்
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மதுக்கடைகளை மூடியதால் மதுபான விற்பனையில் வருவாய் இழப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளது தெரிகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசின் அலட்சியப்போக்கை நிதிநிலை அறிக்கை காட்டுகிறது.
சட்டம் ஒழுங்கு சரியில்லையே
தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்கொடுமைகள், கொலை, கொள்ளை பற்றிய செய்திகள் அன்றாட நிகழ்வுகளாகி மக்கள் கவலைப்படும் நிலையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகக் கூறுவது கேலிக் கூத்து ஆகும். எடப்பாடி பழனிசாமி அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத்தான் பரிசாக தந்திருக்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.