அதிமுக ஆட்சி மீது அமைச்சர்களுக்கே அதிருப்தி? பட்ஜெட்டை புறக்கணித்த 3 சீனியர்கள்
அமைச்சர்களுக்கு ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கையில்லை, பட்ஜெட் மீதும் நம்பிக்கையில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சென்னை: தமிழக பட்ஜெட்டை 3 அமைச்சர்கள் புறக்கணித்துவிட்டது ஆளும் தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2017-18ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையின்போது 3 சீனியர் அமைச்சர்கள் சட்டசபையில் இல்லை.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
சீனியர் அமைச்சர்களான இம்மூவரும், பட்ஜெட் உரை போன்ற ஒரு அதி முக்கிய நிகழ்வின்போது, வராததை பார்த்து,
அதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் கூட சபையின் உள்ளே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் முனுமுனுத்துக்கொண்டதை பார்க்க முடிந்தது.
டெல்லியில் முகாம்
இரட்டை சிலை சின்னம் மற்றும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரம் குறித்து, தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க தம்பிதுரையுடன் மூன்று அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏன் இன்று?
ஆனால், இந்த சந்திப்பை இவர்கள் நாளை கூட வைத்துக்கொண்டிருக்க முடியும். ஆனால் பட்ஜெட் உரை நிகழ்வு அன்று, இந்த 3 சீனியர்களும் சட்டசபைக்கு வராமல் டெல்லியில் முகாமிட்டுள்ளது திட்டமிட்ட புறக்கணிப்பாக இருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
ஆட்சியை புறக்கணித்த அமைச்சர்கள்
பட்ஜெட்டை அமைச்சர்களே புறக்கணிப்பது என்பது, அவர்களது ஆட்சியையே அவர்களே புறக்கணிப்பதற்கு சமம். அமைச்சர்களுக்கு ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கையில்லை, பட்ஜெட் மீதும் நம்பிக்கையில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அதிருப்தி
தற்போதைய அமைச்சரவையில் பலருக்கும் டி.டி.வி.தினகரன் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுவது பிடிக்கவில்லை என்று ஒரு தகவல் உலவுகிறது. குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அவர்கள் அதிருப்தி அதிகரித்துள்ளதாம்.