2018ம் நிதியாண்டில் மேலும் 1 லட்சம் பெண்களுக்கு 'அம்மா ஸ்கூட்டர்'!
2017ம் ஆண்டில் விண்ணப்பித்தவர்களுடன் கூடுதலாக 1 லட்சம் பேருக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.
சென்னை : 2017ம் ஆண்டில் மானிய விலையில் ஸ்கூட்டருக்கு விண்ணப்பித்தவர்களுடன், 2018ம் ஆண்டில் கூடுதலாக 1 லட்சம் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிவிவரங்கள் : மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 42 சிறப்புப் பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்கும் விதமாக கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத் தளம் உருவாக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் தொழில்புரிய வழங்கப்படும் விளிம்பு உதவித்தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும். மாநில அளவில் மாற்றத்திறனாளிகளுக்கான நிதியம் ரூ. 10 கோடி மதிப்பில் உருவாக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.545 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண் குழந்தை திட்டம், தொட்டில் குழந்தை திட்டங்கள் ஜெயலலிதாவின் முன்னோடி திட்டங்கள். தாலிக்குத் தங்கம் பட்டதாரி பெண்களுக்கு திருமண நிதியுதவி உள்ளிட்ட திருமண நிதியுதவி திட்டங்களுக்காக ரூ. 724 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் பெண்களுக்கு மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்காக 2017-18ல் 1 லட்சம் பயனாளிகளில் 5 ஆயிரம் பேருக்கு ஸ்கூட்டருக்கான மானியம் வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சிய பயனாளிகளுடன் கூடுதலாக 1 லட்சம் பயனாளிகளுக்கு 2018-19 நிதியாண்டில் பயனடைவார்கள், இதற்காக ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா தாய்சேய் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்திற்கு ரூ.1001 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 48 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் தரம் உயர்த்தப்படும்.
வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும். சென்னை வஃக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் விடுதி கட்டப்படும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அகதிகள் நலனுக்காக ரூ. 109.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.