உதய் திட்டத்தில் இணைந்ததால் தமிழகத்திற்கு லாபம்.. 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும்: அமைச்சர்
தமிழக அரசு செயல்படுத்தி வரும் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை: 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், தாக்கல் செய்து அமைச்சர் ஜெயக்குமார் உரையாற்றுகையில், மின்சார திட்டங்கள் குறித்து கூறியதாவது:
உபரி காற்றாலை மின்சாரத்தை வெளிமாநிலத்துக்கு விற்ப புதிய வழித்தடம் அமைக்கப்படும். உலக முதலீட்டாளர் மாநாட்டு நடத்த ரூ75 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்துள்ளது. இத்திட்டப்படி மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் 30400 கோடி அளவு கடன் சுமையில், 75 சதவீத கடன் சுமையை மாநில அரசே ஏற்றுள்ளது. கடனை திருப்பி செலுத்த வெளிச்சந்தையின் கடன் பத்திரங்களை வெளியிட்டு வருகிறது.
மீதமுள்ள 25 சதவீத கடன் தொகையை மின் உற்பத்தி பகிர்மான கழகம் வெளியிடும் கட்டண பத்திரமாக வெளியிடப்படும். அரசே கடன் சுமையை ஏற்பதால் அந்த நிறுவனத்தின் கடன் சுமை, வட்டி சுமை குறையும்.
வட்டி சுமை குறைவதால், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ரூ.201 கோடி ஆண்டுதோறும் சேமிப்பு ஏற்படும். உதய் திட்டத்தை செயல்படுத்தியதால் தமிழக அரசு மற்றும் மின் உற்பத்தி பகிர்மான கழகத்திற்கும் வட்டி செலவு குறைவதால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1335 கோடி அளவுக்கு சேமிப்பு ஏற்படும்.
தமிழக மின் உற்பத்தி பகிர்மான கழகம் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய, ரூ.4523 கோடி அளவுக்கான கடன்கள் மற்றும் வட்டி ஆகியவை 2016-17ல், பங்கு மூலதன உதவியாக அரசால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கழகத்தின் நிதி நிலை மேலும் வலுப்பெறும். அதன் கட்டுப்பாட்டில் உள்ள புனல் மின்நிலையங்கள் அதன் வடிவமைப்பு காலத்திற்கு மேல் கடந்துவிட்ட நிலையில் புதுமையான நிதி திரட்டும் நடவடிக்கையாக வருவாய் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட உள்ளோம்.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும். விவசாயம், இதர பயன்பாடுகளுக்கான மின்சார செலவீனங்களுக்கு இந்த பட்ஜெட்டில் மொத்தம் 8538 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.