உருப்படியான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை.. ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
உருப்படியான எந்தத் திட்டமும் தமிழக பட்ஜெட்டில் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: 2017-18ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை, தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைத் தவிர மற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களும் விமர்ச்சித்து வருகின்றனர்.
தமிழக பட்ஜெட் குறித்து தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது:
முறைசாரா தொழிலாளர்
முறைசாரா தொழிலாளர்கள் 68 லட்சத்து 52 ஆயிரம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். 115 கோடி ரூபாய் நல உதவித் தொகை வழங்கி இருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், நல உதவித் தொகைக் கேட்டு மனு கொடுத்தோர் எண்ணிக்கை என்பது 2 லட்சத்து 70 ஆயிரம் பேர். கடந்த ஆண்டு உதவித் தொகை கேட்டு மனு கொடுத்தவர்களுக்கு இன்னும் உதவித் தொகை வழங்கப்பட வில்லை. எனவே, மாநில அரசு தற்போது ஒதுக்கியுள்ள தொகை போதுமானதல்ல.
வேலைவாய்ப்பு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு 100 கோடி ரூபாய் செலவழித்து அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக மாநில அரசு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. மாநிலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 80 லட்சம் பேர் வேலையற்றவர்களாக பதிவு செய்துள்ளனர். இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் எந்தத் திட்டமும் இல்லை.
பள்ளிக் கல்வி
பள்ளிக் கல்வித் துறை பற்றிய தகவல்கள் பட்ஜெட்டில் தமிழக அரசு மறைத்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த நிதி ஒதுக்கிட்டில் எந்தத் திட்டமும் இல்லை.
சிறு குறு தொழில்கள்
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு குறு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை போக்குவதற்காக எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. மேலும் சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்கக் கூடிய திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. மேலும், அந்த துறைக்காக 535 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதும் போதுமானதாக இல்லை.
ஜீரோ பட்ஜெட்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கோ மக்கள் வாழ்வாதாரத்தை தீர்மானிப்பதற்கோ எந்த திட்டமும் இல்லை. மாநில அரசிற்கு ஏற்கனவே கடன் சுமை அதிகரித்துள்ளது. அந்த கடன் சுமையை தீர்க்க என்ன வழி, வேலையின்மையை போக்க என்ன வழி என்பது குறித்து பட்ஜெட்டில் கொடுக்கவில்லை என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.