முன்கூட்டியே தமிழக பட்ஜெட்… அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தகவல்
தமிழகத்தில் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் மா. ஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார்.
திருவள்ளூர்: மத்திய பட்ஜெட்டை போல, தமிழக பட்ஜெட்டும் முன்கூட்டியே நிறைவேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா. ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மா. ஃபா. பாண்டியராஜன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா. ஃபா. பாண்டியராஜன், பொது பட்ஜெட்டை மத்திய அரசு முன்கூட்டியே நிறைவேற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. அதே போன்று தமிழக அரசும் முன்கூட்டியே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், தொகுதியில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மா. ஃபா. பாண்டியராஜன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற இருந்தால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், தேர்தல் முடிந்த பிறகு திருத்தப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.