தேர்தல் ஸ்பெஷல்: வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் வரி ஏதும் விதிக்கப்படவில்லை.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கமாக காலை 10 மணிக்குத்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் இம்முறை முதலில் 10 மணிக்கு என்று அறிவித்துவிட்டு பின்னர் 11 மணிக்கு பட்ஜெட் தாக்கலாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பின்னர் முற்பகல் 11 மணிக்கு பட்ஜெட்டை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதிமுக ஆட்சிக் காலத்தின் 4வது பட்ஜெட் இது. முற்பகல் 11 மணி முதல் சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.
பட்ஜெட் தாக்கலின் தொடக்கத்தில் ஜெயலலிதாவை அதிகமாகவே புகழ்ந்து பாராட்டி கைதட்டல்களைப் பெற்றார் ஓ. பன்னீர்செல்வம். அத்துடன் லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டதால் அனைவரும் எதிர்பார்த்தபடியே எந்த ஒரு வரி விதிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
மாறாக வழக்கமான இலவச அறிவிப்புகள் நடப்பாண்டிலும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.