தமிழகத்தில் 4-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் நீடிப்பு- குறைவான பேருந்துகளே இயக்கம்!
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.
சென்னை: தமிழகத்தில் 4-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பதால் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டதில் குதித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அனைத்து இடங்களில் மிகவும் குறைவான பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டே இயக்கப்படுகின்றன. இதனால் ரயில்கள், தனியார் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் பெரும்பாலான பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் போராட்டத்தை கைவிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதனை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.
இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு போக்குவரத்து கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அத்துடன் தற்காலிக பணியாளர்க்களை முழு வீச்சில் பயன்படுத்தி அரசு பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.