பரபரப்பான அரசியல் சூழலில் அமைச்சரவை கூட்டம்… நீட், விவசாயிகள் பிரச்சனை குறித்து முக்கிய முடிவு
பரபரப்பான அரசியல் சூழலில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அதில், குடிநீர், வறட்சி, விவசாயிகள் பிரச்சனை குறித்து முக்கிய விவாதம் நடைபெற்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சென்னை: சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்காக சட்டசபையை கூட்டுவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, அதிமுக இணைப்பு, அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் இன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவைக் கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்காக சட்டசபையை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதே நேரத்தில் விவசாயிகளின் பிரச்சினை, தமிழகம் முழுவதும் எழுந்துள்ள மின்சார தடை, நிலங்கள் பத்திர பதிவு, வறட்சி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், நீட் தேர்வு குறித்தும், விவசாயிகள் பிரச்சனை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றப் பின்னர் அவரது தலைமையிலான 3வது அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.