டெல்லி பலாத்காரம் எதிரொலி: கால் டாக்ஸி டிரைவர்களுக்கு சென்னை போலீஸ் கிடுக்கிப்பிடி!
சென்னை: டெல்லியில் கால்டாக்ஸியில் பயணித்த இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, சென்னையில் வாடகை கார் நிறுவனங்களுக்கும், டிரைவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் மாநகர காவல்துறை விதித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் உபேர் நிறுவனத்திற்கு சொந்தமான கால்டாக்ஸியில் பயணம் செய்த, நிதி நிறுவன பெண் ஊழியர் ஒருவர் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தையொட்டி, சென்னையில் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடும் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வாடகை கார் அதிபர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மேற்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவர்களின் பின்னணி
ஓட்டுநர்களை வேலைக்கு எடுக்கும்போது, அவர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்களா, இல்லையா என்பதை எடுத்துக்காட்டும் காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழை வாங்கி பார்த்துதான், வேலைக்கு எடுக்க வேண்டும்.
காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழ் இல்லாமல், ஓட்டுநர்களை வேலைக்குச் சேர்க்கக்கூடாது என்று வாடகை கார் நிறுவனங்களுக்கு காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
போதையில் இருந்தால்...
மேலும் போதையில் கார் ஓட்டிய ஓட்டுநர்கள், ஒரு முறை காவல்துறையினரிடம் சிக்கினால் கூட, அவர்களுக்கு கண்டிப்பாக மீண்டும் வேலை கொடுக்கக்கூடாது என்றும் வாடகை கார் நிறுவனங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
சோதனை அவசியம்
இரவு நேரத்தில் சாலைகளில் செல்லும் வாடகை கார்களை கண்டிப்பாக சோதனை போட வேண்டும் என்றும், போக்குவரத்து காவலர்களுக்கு உயர் அதிகாரிகள் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளனர்.
நடவடிக்கை அவசியம்
சோதனையின்போது, வாடகை கார் டிரைவர்கள் போதையில் இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.