டிரான்ஸ்பர் உத்தரவு எதுவும் வரவில்லை: சொல்கிறார் சந்தீப் சக்சேனா
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பணியில் இருந்து தன்னை விடுவிப்பது தொடர்பான எந்த உத்தரவும் வரவில்லை என சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், அப்போதைய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீண்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பிறகு, ஸ்ரீரங்கம் மற்றும் ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்துதல், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், ‘ஈசி' என்ற புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சந்தீப் சக்சேனா மேற்கொண்டு வந்தார்
இந்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி பணியில் இருந்து சந்தீப் சக்சேனா விடுவிக்கப்படுவதாகவும், அவருக்கு பதில் விரைவில் வேறு ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
சக்சேனா விருப்பத்தின் பேரில்,அவரை பணியில் இருந்து தேர்தல் ஆணையம் விடுவிப்பதாகவும், விரைவில் அவர் தேர்தல் ஆணையத்தில் துணை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியானது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சந்தீப் சக்சேனா மாற்றம் குறித்த தகவல், தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, சந்தீப் சக்சேனாவை செய்தியாளர்கள் சந்தித்து கேட்டனர், அவர்களுக்கு பதிலதித்த சந்தீப் சக்சேனா, தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிப்பது தொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை என்றார். தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையிலான விஷயத்தில் நான் எந்தக் கருத்தும் கூற முடியாது என்றும் கூறினார்.
நான் தமிழக அரசின் கீழ் பணியாற்றினாலும், தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டவன். அங்கிருந்தும் இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. தலைமைத் தேர்தல் அதிகாரியாக என் பணியை தொடர்கிறேன். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவரங்களை வியாழக்கிழமை வெளியிடுகிறேன் என்றும் தெரிவித்தார் சந்தீப் சக்சேனா.