தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் மாற்றம்- ராமமோகன் ராவ் நியமனம்
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ராமமோகன் ராவ் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். டிட்கோவின் தலைவராக ஞானதேசிகன் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலராக ஞானதேசிகன் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். மின்சார வாரியத் தலைவராக இருந்த ஞானதேசிகன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்த போதும் அவரை தலைமைச் செயலராக ஜெயலலிதா நியமித்தார்.
ஞானதேசிகனைவிட மூத்த அதிகாரிகள் இருந்த போதும் அவருக்கு தலைமைச் செயலர் பதவி வழங்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போய்விட்டு ஜாமீனில் வந்த போது முதலமைச்சர் பதவியை இழந்திருந்தார். ஆனாலும் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்துக்குப் போய் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று வந்தவர் ஞானதேசிகன்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக ஜெயலலிதா கோட்டைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அப்போது ஞானதேசிகன் உடன் இருக்கவில்லை.
ஜெயலலிதாவின் தனிப்பிரிவு செயலராக இருந்த ராமமோகன் ராவ்தான் கோப்புகளை ஜெயலலிதாவுக்கு எடுத்துக் கொடுத்தார். அப்போதே ஞானதேசிகன் மாற்றப்படக் கூடும் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலர் ஞானதேசிகன் மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலராக ராமமோகன் ராவ் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்த ஞானதேசிகன் டிட்கோவின் தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் பல்வேறு துறைகளின் செயலர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.