ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி: முதல்வர்
சென்னை: அருணாசல பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் ஒன்றில் 2 விமானிகள் உள்பட 5 விமானப்படை வீரர்களும், 2 ராணுவ வீரர்களுமாக 7 பயணித்தனர்.
சீன எல்லையோரம் அமைந்துள்ள தவாங் நகருக்கு அருகே உள்ள கரிமுராவில் இருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் விக்ரம் உபத்யாய், எஸ்.திவாரி, ஏ.கே.சிங், கவுதம், சதீஷ்குமார் ஆகிய விமானப்படை வீரர்களும், இ.பாலாஜி மற்றும் எச்.என்.டேகா ஆகிய ராணுவ வீரர்களும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதில் பாலாஜி தமிழகத்தை சேர்ந்தவராகும். இதுகுறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழக ராணுவ வீரர் பாலாஜியின் குடும்பத்திற்கு ரூ.20லட்சம் நிதி உதவி வழங்கப்படும். பாலாஜியை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.