கரும்புக்கான ஆதாய விலை ரூ.2,650 ஆக நீடிப்பு: தமிழக முதல்வர் அறிவிப்பு
சென்னை: நடப்பாண்டு கரும்புக்கான ஆதாய விலை ரூ.2,650 ஆக நீடிக்கும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கை:
கரும்பு உற்பத்தியைப் பெருக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே வேளையில், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிவித்து வரும் நியாயமான மற்றும் ஆதாய விலையை விடக் கூடுதலான விலையை தமிழக அரசு வழங்கி வருகிறது.
2011-12 ஆம் ஆண்டு டன் ஒன்றுக்கு 2,100 ரூபாய் எனவும்; 2012-13 ஆம்ஆண்டுக்கு 2,350 ரூபாய் எனவும்; 2013-14 ஆம் ஆண்டுக்கு 2,650 ரூபாய் எனவும் கரும்பின் விலையை முன்னாள் முதல்வர் நிர்ணயித்தார்.
இந்நிலையில், 2014-15 ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு 2,200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது.
தற்போது சர்க்கரைத் தொழிலில் நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அண்டை மாநிலமான கர்நாடகம் மத்திய அரசு அறிவித்த ஆதாய விலையான டன் ஒன்றுக்கு 2,200 ரூபாய் என்ற விலையை முதலில் வழங்கவும், பின்னர் டாக்டர் ரங்கராஜன் குழு பரிந்துரையான வருவாய் பகிர்மான கொள்கைப்படி விலை நிர்ணயம் செய்வதற்கும் முடிவு செய்துள்ளது.
இதே அடிப்படையில், மகாராஷ்டிரா மாநில அரசும் முடிவு செய்துள்ளது. இருப்பினும், தமிழக கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு கரும்புக்கு நிர்ணயித்த விலையான டன் ஒன்றுக்கு 2,200 ரூபாயுடன், மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 450 ரூபாய் உயர்த்தி, டன் ஒன்றுக்கு 2,650 ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ3,500ஆக உயர்த்தி வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்!