அரியலூர் அனிதாவின் அண்ணனுக்கு அரசுப்பணி, ரூ. 7 லட்சம் நிவாரணம் அளித்த முதல்வர்
நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிர்நீத்த அரியலூர் மாணவி அனிதாவின் அண்ணனுக்கு சுகாதாரத்துறையில் அரசுப்பணி வழங்கி முதல்வர் பழனிசாமி அதற்கான அரசாணையை அளித்துள்ளார்.
சென்னை: அரியலூர் மாணவி அனிதாவின் அண்ணனுக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் அரசுப்பணி வழங்கி முதல்வர் பழனிசாமி அதற்கான அரசாணையை அனிதாவின் தந்தையிடம் அளித்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் அனிதா கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா, தனக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கு இடம் கிடைக்காத மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்த மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அறிவித்தார். அவருடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் கூறினார்.
ஆனால் இதனை ஏற்க அனிதா குடும்பத்தினர் மறுத்து வந்தனர். மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று கொடுத்த நிதி உதவியையும் ஏற்க மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகள் அனிதாவின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அரசு பணியையும், நிவாரண தொகையையும் ஏற்றுக்கொள்ள ஒத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் அனிதாவின் தந்தையிடம் ரூ. 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், அனிதாவின் அண்ணன் சதீஷ் குமாருக்கு சுகாதாரத்துறையில் அரசுப்பணி ஒதுக்கியுள்ளதற்கான அரசாணையும் அளித்தார்.