நாட்டின் மிகப்பெரிய பூச்சி அருங்காட்சியகம்... கோவையில் திறந்து வைத்தார் முதல்வர்
நாட்டின் மிகப்பெரிய பூச்சி அருங்காட்சியகத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் : கோவை வேளாண் பல்கலைகழகத்தில் நாட்டின் மிகப்பெரிய பூச்சி அருங்காட்சியகத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். 22,122 இனங்களை சேர்ந்த 84 ஆயிரம் பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள், பூச்சிகள் இடம்பெற்றுள்ளன.
கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நாட்டின் மிகப்பெரிய பூச்சி அருங்காட்சியகத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். இந்த அருங்காட்சியகத்தில் இந்தியா மட்டுமின்றி, பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பூச்சி இனங்களும், ஒட்டுண்ணிகளும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் கண்ணாடிக் கூண்டில் பூச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன பூச்சிகளுக்கு அருகே அதன் மேல்புறம் உள்ள எல்.இ.டி. திரையில், அந்தப் பூச்சிகளின் வகை, அவற்றின் நன்மை - தீமைகள், அவற்றை எந்தெந்த நாட்டில் பார்க்கலாம் உள்ளிட்ட விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்டுகின்றன.
மேலும் பூச்சிகளுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், நாணயங்கள், அதை வெளியிட்ட நாடுகள், பூச்சிகள் குறித்து உலக அளவில் வெளிவந்திருக்கும் நூல்கள், தோண்டி எடுக்கப்பட்ட இரண்டு பெரிய கரையான் புற்றுகள் போன்றவை எல்லாம் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளிவாயிலில் தேனீக்கள் வளர்க்கும் பண்ணையும் உருவாக்கப்பட்டுள்ளது.