ஜெ. தலைமையில் '10 நிமிடம்' நடைபெற்ற முதலாவது கேபினட் கூட்டம்! எம்.பி.க்களுடனும் ஆலோசனை!!
சென்னை: தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்ற ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார். 10 நிமிடங்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டசபையில் மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் தமிழக முதல்வராக மே 23-ந் தேதி ஜெயலலிதா பதவியேற்றார். பின்னர் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்ற நிலையில் அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படாமல் இருந்தது. சட்டசபையில் மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன.
இந்நிலையில் தலைமைச் செயலகத்துக்கு இன்று 3வது முறையாக ஜெயலலிதா வருகை தந்தார். தலைமைச் செயலகத்தின் கீழ்தளத்தில் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை ஜெயலலிதா கூட்டினார். பகல் 12.55 மணி முதல் பகல் 1.05 மணி வரை சுமார் 10 நிமிடங்கள் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சட்டசபையில் மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திலேயே அண்ணா தி.மு.க. எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை கூடும் நிலையில் அதிமுக எம்.பிக்கள் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
இதன் பின்னர் நலத் திட்ட உதவிகளை காணொலி காட்சிகள் மூலம் ஜெயலலிதா வழங்கினார்.