தேர்தல் முடிவு வரும் வரை கருத்து சொல்ல மாட்டேன்- சசியுடன் வாக்களித்த ஜெ. பேட்டி
சென்னை: தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்தார்.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் பிரபல தலைவர்கள் தங்கள் வாக்கினை காலை முதலே பதிவு செய்து வருகின்றனர்.
ஓட்டு போட்ட ஜெ.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மத்திய சென்னைக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.
அவருடன் அவருடைய தோழி சசிகலாவும் வாக்களிக்க வந்தார். அவர் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த போது ஏராளமான செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தனர்.
அமைதியான தேர்தல்
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி வருவதாக கூறினார்.
முடிவு வரட்டும்
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் முடிவுக்குப் பின்னர் எனது கருத்தைச் சொல்வேன் என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
கனிமொழி குற்றச்சாட்டு
திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி, சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 144 தடை உத்தரவு போடப்பட்டதால் எதிர்கட்சியினர் ஒடுக்கப்பட்டனர். ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது என்றார்.