ஓபிஎஸ் செக்.... தனக்கெதிராக களமிறங்கும் அமைச்சர்கள் மீது விரைவில் நடவடிக்கை
முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு எதிராக பேசும் அமைச்சர்கள் விரைவில் கட்டம் கட்டப்படலாம் என்று பேச்சுக்கள் அடிபடவே, இப்போது சத்தமில்லாமல் பலர் சைலண்ட் ஆகி வருகிறார்களாம்.
சென்னை: சின்ன அம்மா பொதுச்செயலாளராக வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூறி வந்தனர். கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா வர வேண்டும் என்பதை ஓ.பன்னீர்செல்வமும் ஆதரித்து, அறிக்கை வெளியிட்டார்.
திடீரென்று சசிகலா முதல்வராக வேண்டும் என்று கர்நாடகாவில் தீர்மானம் போடவே, ஜெ. பேரவை சார்பில் புதிதாக ஆட்சியையும், கட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டு அதை ஜெயலலிதா சமாதியில் வைத்து ஆசி வாங்கி அந்த தீர்மானத்தை சசிகலா கையில் கொடுத்திருக்கிறார் அமைச்சரும், ஜெ. பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி. உதயகுமார்.
ஜெயலலிதா சமாதியில் தீர்மானம்
ஜெயலலிதா சமாதியில் கூடிய அமைச்சர்கள்,தமிழகத்தின் முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும். 'கட்சிக்கும் ஆட்சிக்கும் அவரே தலைமை தாங்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றினர். இந்தத் தீர்மானத்தின் நகலை போயஸ் கார்டனுக்கே சென்று வழங்கினார் உதயகுமார்.
சின்னம்மா முதல்வர்
நேற்று முதலே, 'சசிகலா முதல்வராக வேண்டும் என்ற ரீதியில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர்.
இதுபோன்ற பேச்சுக்கள் ஓ.பி.எஸ்சுக்கு சங்கடத்தை ஏற்படுத்தவே, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, கட்சிக்குள் நிலவும் சூழல்களை விளக்கினாராம்.
ஆர்.பி. உதயகுமார் பல்டி
காலையில் சசிகலா முதல்வராக பணிவான தொண்டரான பன்னீர் செல்வம், சிந்தாமல் சிதறாமல் விட்டுக்கொடுப்பார் என்று கூறினார். மொட்ட போட்ட பின்னர் என்ன நெருக்கடி ஏற்பட்டதோ, அம்மா பேரவையின் சார்பில், சசிகலா முதல்வராக வேண்டும் என தீர்மானம் போட்டோம். அது முதல்வர் ஓ.பி.எஸ்சுக்கு எதிரான தீர்மானம் அல்ல என பேசினார் அமைச்சர் உதயகுமார். இதெல்லாம் எப்படி? திடீரென உதயகுமார் மாற்றி பேசியது ஏன் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
அமைச்சரவையில் மாற்றம்
அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் இப்போதைக்கு ஒபிஎஸ் வசம்தான் இருக்கிறது. எனவே தனக்கு எதிரான அமைச்சர்களை ஓபிஎஸ் விரைவில் மாற்றலாம் என்று பேசப்பட்டதால் சில அமைச்சர்கள் சைலன்ட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அம்மா இல்லாவிட்டால் அமைச்சரவை மாற்றம் இருக்காது என்று சில அமைச்சர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பணிவாக இருக்க அவர் பழைய பன்னீர் செல்வம் இல்லை என்கின்றனர் ஒபிஎஸ் ஆதரவாளர்கள்.